சென்னை: அதிமுக கட்சிக்குள் பெரும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என எம்எல்ஏக்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறான அறிவிப்பு ஒன்றை அதிமுக வெளியிட்டது. அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்னும் உத்தரவுதான் அந்த அறிவிப்பு.
மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் கூறக்கூடாது என அதிமுக தலைமை அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அக்கட்சி தலைமை எச்சரித்துள்ளது.
அதிமுகவில் அடுத்தக்கட்ட அரசியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் யாரும் ஊடகங்களில் கருத்துக்கூற வேண்டாம் என்றும் அதிமுக தலைமைக் கழகம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தங்களின் சொந்தக் கருத்துகளை கட்சியின் கருத்தாக தெரிவிப்போர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
"அதிமுகவின் ஒழுங்கு, கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தித் தொடர்பாளர்களுக்கு உரிமை உண்டு," என்றும் அதிமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோத செயல் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

