சென்னை: அண்மையில் தமிழகத்தை பயமுறுத்திய 'வாயு' புயல் வலுவிழந்த பிறகே தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறுகையில், அரபிக் கடலில் 'வாயு' புயல் உருவானதிலிருந்து, தென்மேற்கு பருவக்காற்று தமிழகம் நோக்கி வீசுவது குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
"அதனால் முந்தைய ஆண்டுகளில், இதே காலகட்டத்தில் பெய்த மழை இந்த ஆண்டு தமிழகத்தில் பெய்யவில்லை. கேரளாவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. வாயு புயல் வலுவிழந்த பிறகே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதுகுறித்த விவரங்கள் சில தினங்களில் தெரியவரும். தற்போதைக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைவுதான்," என்றார் புவியரசன்.

