கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் நேற்று திறக்கப்பட்ட சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையின் ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் பொதுப் போக்குவரத்து பேருந்தின் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று கொண்டும் பெரிய விளம்பரப் பதாகைகளைக் கையில் வைத்து கொண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்தின் கூரையில் ஆபத்தான முறையில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்துகொண்டு பயணித்த மாணவர்கள், பேருந்து பிரேக் போட்டபோது மேற்கூரையின் முன்புறம் சாலையில் விழுந்தனர்.
கொத்தாக பேருந்தின் முன்புறத்திலிருந்து சாலையில் மாணவர்கள் விழுந்த காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிவருகிறது.
அந்தக் காணொளியை தமிழ் முரசின் ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.
காயம் ஏற்பட்டிருந்தும் மாணவர்கள் உடனே எழுந்து நின்றனர். மாணவர்கள் எவரது உயிருக்கும் பாதிப்பில்லை.
இதனைத் தொடர்ந்து 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 13 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலிஸ் படை விசாரணை நடத்தி வருகிறது.
மற்றொரு இடத்தில் நடந்த இதேபோன்ற 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

