மாநிலங்களவைத் தேர்தல்: வைகோவின் வேட்பு மனு ஏற்பு

மாநிலங்களவைத் தேர்தல்: வைகோவின் வேட்பு மனு ஏற்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக 3 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று பிணையில் உள்ள வைகோவுக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, அவரது மனு நிராகரிக்கப்படலாம் என பரவலாகப் பேசப்பட்டது.

இதனால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன. அதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது.

திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. எனவே, வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் உள்ள சிக்கல் நீங்கி உள்ளது.