திருப்புவனம்: சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதில் பழமையான தாழிப்பானை, மண்பானை ஓடுகள் போன்றவை கிடைத்து வருகின்றன. பூமிக்கடியில் புதைந்திருந்த இரட்டைச்சுவர் கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஜிபிஆர்எஸ் கருவி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த இரட்டைச்சுவரை ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.
மலேசியாச் சேர்ந்த வரலாற்றுப் பாட ஆசிரியர் மாரியப்பன், கணித ஆசிரியர் வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று முன்தினம் கீழடி வந்தனர். தமிழர் நாகரிகத்தின் பழங்காலச் சுவரைப் பார்த்து அவர்கள் வியந்தனர். ஆச்சர்யமடைந்தனர். அந்த ஆசிரியர்கள் கூறுகையில், "மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களுக்கு ஈடாக கீழடி அகழாய்வு திகழ்கிறது என்பதை யூடியூப்பில் பார்த்து வியந்தோம். அதனை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு வந்தோம்.
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கழிவுநீர் செல்லும் வழி, மண்குழாய் மூலம் தண்ணீர் செல்லும் வழி போன்ற இன்றைய நவீன வசதிகளையெல்லாம் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை இங்கு காண முடிகிறது. நமது முன்னோர்களான சேர, சோழ, பாண்டியர்கள் இந்த உலகத்தையே ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் மறைக்கப்படுகின்றன. இந்த ஆய்வு தொடரவேண்டும். கீழடியில் 100 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்றனர்.

