சென்னை: ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சுவாசக் கோளாறு இருப்பதாக ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மகன் ரா.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, ராஜகோபாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். தள்ளிவைக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்தது. ஆனால் அதற்கு தான் முழுப்பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.