ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்: நல்ல நோட்டுக்கு போராட்டம்

ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்: நல்ல நோட்டுக்கு போராட்டம்

1 mins read
0eae6dc8-7776-4a70-9b5a-18f6886cc0bd
கள்ளநோட்டுகள். படம்: ஊடகம் -

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராகப் பணிபுரிந்து வருகிறார்.

திங்கட்கிழமை இரவு நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் அவர் ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளார். அதில், ஐந்து 2000 ரூபாய் நோட்டுகள் ஒட்டப்பட்ட கள்ளநோட்டுகளாக வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் புகார் அளிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்துவிட்டு மறுநாள் வரும்படி கூறியுள்ளனர். மேலும் வங்கியின் நுழைவாயிலைப் பூட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலிசார், மூர்த்தியிடம் சமரசம் பேசினர். பின்னர் அவரை வங்கிக்குள் அழைத்துச் சென்றனர்.

புகார் மனுவுடன் கள்ள நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள் ரூ.10 ஆயிரத்தைத் திருப்பித் தருவதாகக் கூறினர்.