பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்தின் காவிரி ஆற்றிற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கபினி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீரும் கேஆர்எஸ் அணையிலிருந்து 355 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் குடகு பகுதியில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரியி லிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உத்தரவுப்படி கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கன அடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
மழைக்காலத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. மாண்டியா மாவட்ட விவசாயிகள், நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மதித்தும் மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் குமாரசாமி கூறினார்.