'சரவணபவன்' உணவக நிறுவனர் பி.ராஜகோபால் நேற்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 71. கொலை வழக்கில் ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் உறுதிப்படுத்தியதோடு அவர் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதையடுத்து, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
இருந்தபோதும், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை
இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
ஆயினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றுக் காலை 10.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
தம்மிடம் மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகளான ஜீவஜோதி என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்ய அவர் ஆசைப்பட்டார். ஆனால், ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரைக் காதலித்து மணந்துகொண்டார். இந்த நிலையில், 2001ஆம் ஆண்டில் சாந்தகுமார் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலையில் ராஜகோபாலுக்குத் தொடர்பு இருந்ததை உறுதிசெய்த செய்த பூந்தமல்லி நீதிமன்றம் அவருக்குப் பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பத்தாண்டு சிறைத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அறிவித்தது. இதை எதிர்த்து, ராஜகோபால் உச்ச நீதிமன்றம் சென்ற போதும் அங்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.