மதுரை: சிறிய குடும்பம்,பெரிய குடும்பத்தினர் என்ற முறையில் குடிநீரின் தேவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாறுபடும். இந்தக் குடும்பத்தினர் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மின்சாரத்தை போலவே தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஒரு ‘ஹை டெக்’ திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக வந்த அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுவதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 1,020 கோடியில் பெரியாறு அணை யில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் பெறும் ‘பெரியாறு குடிநீர் திட்டம்’ நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.
பகுதி 1ன் ஏலக்குத்தகை வழி இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தற்போது வைகை அணை நிரம்பினாலும் மதுரை மாநகராட்சியால் 100 வார்டுகளுக்கும் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்யமுடியாத நிலை உள்ளது.
இந்த குழாய்கள் பழுதடைந்து அடிக்கடி உடைந்து போவதால் 40க்கும் மேற்பட்ட வார்டுகளில் குடிநீர் சென்றடையவில்லை.
அவர்கள் மின் மோட்டார், கை பம்புகளைக் கொண்டு குடிநீரை சேகரித்து வருகின்றனர். அது போதாமல் லாரி மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 100 வார்டுகளிலும் பழைய குழாய்களை மாற்றும் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளரான அரசு என்பவர் கூறுைகயில், “மதுரை மாநகராட்சியில் பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அங்குள்ள சுமார் 100 வார்டுகளிலும் மின்கட்டணத்தைப் போல் உபயோகப்படுத்தும் அளவுக்கு ஏற்ப குடிநீர் கட்டணம் நிர்ணயித்து வசூல்செய்ய மாநகராட்சி ‘ஹை டெக்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
“பெரியாறு குடிநீர் திட்டத்துடன் சேர்த்து குடிநீர் குழாய்கள் அனைத்தும் மாற்றப்பட்ட பிறகு, குடிநீரை உபயோகப்படுத்தும் அளவுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
“இதற்காக ‘ஸ்கடா சிஸ்டம்’ குடிநீர் குழாய்கள் சென்சார் மூலம் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் பயன்பாட்டை கண்காணித்து, அதற்கு தகுந்தாற்போல் குடிநீர் கட்டணத்தை மாதம்தோறும் அதிகாரிகள் வசூல் செய்வர்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, நீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற பெரும் கொள்ளை, இதில் எந்த நியாயமும் இல்லை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.