சென்னை: தமிழ்நாட்டில் ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு ரகசிய முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்ததை அடுத்து தேசிய புலனாய்வு முகவை இப்போது 16 பேரை விசாரித்து வருகிறது.
அந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த முகவை அதிகாரிகள் நேற்று மாநிலம் முழுவதும் 14 இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தினார்கள்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சோதனைகள் நடந்தன. மயிலாடுதுறையிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
என்றாலும் மேல் விவரங்களைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்துவதற்காக முயற்சிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி 16 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களை எட்டு நாள் தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு தேசிய புலனாய்வு முகவை விடுத்த கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிமன்றம் அந்த விசாரணைக்கு அனுமதித்தது.
அதையடுத்து அதிகாரிகள் அந்த 16 பேரையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவர்களை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
சந்தேகப்பேர்வழிகள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கும் அல்-கய்தா அமைப்புக்கும் ஆதரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து தேசிய புலனாய்வு முகவை தனது புலன்விசாரணையைத் தொடங்கியது.
பல இடங்களிலும் சோதனை நடத்தியது. இந்த நிலையில் துபாயில் பயங்கரவாதம் தொடர்பில் கைதான 14 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களைக் கைது செய்த இந்திய அதிகாரிகள், தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இருவரை பிடித்தனர்.
மொத்தம் 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது அவர்களைக் காவலில் எடுத்து இந்த முகவை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சந்தேக நபர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடந்தது.