வேலூர்: வேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் பலருடைய கணிப்புகளையும் பொய்யாக்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தொகுதியில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் களத்தில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த நிலைமை இப்போது வேலூரில் இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வென்றது.
வேலூரில் திமுக எளிதாக வென்றுவிடும் என்று இன்னமும் அந்தக் கட்சியினர் நம்புகிறார்கள் என்றாலும் பலரிடத்திலும் வேறு மாதிரியான எண்ணங்களும் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பாஜக அரசாங்கம் யானை பலத்தில் ஆட்சி நடத்துவதால் திமுகவுக்கு வாக்களிப்பதில் அர்த்தம் இருக்காது என்று சிலர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் தொகுதிக்கு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார் என்று பலரும் கருதுவதாக அரசியல் கவனிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இப்போது வேலூரில் முடிவு வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், பொது நிர்வாகத் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் என்பவரும் வேலூர் தொகுதி வாக்காளர்கள் மனதில் இப்போது சிறு மாற்றம் இடம் பெற்று இருப்பதாகக் கணிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் நிலவியதைப்போன்ற எண்ணம் வாக்காளர்களிடம் இப்போது எண்ணம் இல்லை. திமுகவுக்கு முன்பு இருந்த ஆதரவு இப்போது இருக்காது என்கிறார் அவர்.
என்றாலும் இந்தத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வாக்குகளுடன் திமுக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் பொருளாளரான துரைமுருகனும் இதர பிரமுகர்களும் அடித்துக் கூறுகிறார்கள்.