வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழாவில் 3.500 ஆடுகளை வெட்டி கறிவிருந்து சமைத்து விடிவதற்குள் எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்த பண்டிகை போலிஸ் காவலுடன் நடந்துமுடிந்தது.
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற கருப்பணசாமி கோவிலில், ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு பண்டிகையை ஒட்டி கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டும் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது.
இதற்காக உள்ளூர் மட்டுமின்றி பல வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஜூன் மாதம் முதலே, சுமார் 3,500 ஆடுகளை நேர்த்திக்கடனுக்காக அந்தக் கோயிலுக்கு விட்டிருந்தனர்.
திருவிழாவின்போது ஆடுகளை சமைத்து விடிவதற்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்பது பரம்பரை வழக்கம்.
அந்த வழமைப்படி அத்தனை ஆடுகளையும் வெட்டி மசாலா சேர்க்காமல் சமைத்தனர்.
சமைக்கப்பட்ட ஆட்டுக் கறியை திருவிழாவிற்காக கூடிய ஆண்கள் விடிவதற்குள் சாப்பிட்டு முடித்தனர்.
சுமார் 250 போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

