சேலம்: தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்து வந்த பிரியாணிக் கடைகளின் எண்ணிக்கை இப்போது எளிதில் எண்ணிவிட முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கில் பிரியாணி விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கடைகளில் கோழி, இறைச்சி பிரியாணி உள்ளிட்ட பல வகைகளில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்தக் கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளை சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் தினமும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிடுகின்றனர்.
நாமக்கல், திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தக் கடைகளால் மக்களுக்கு பல நோய்கள் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "சமீபகாலமாக சிக்கன் கடை, சில்லி சிக்கன் கடை, பிரியாணி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நூறு அடி தூரத்திற்கு ஒரு சிக்கன் கடை உள்ளது. இந்த சிக்கன் கடைகளின் வருகையால் மக்களுக்கு சீக்கிரம் நோயும் தொற்றிக்கொள்கிறது.கறிக்கோழி விரைவில் பெரியதாக வளர அதற்கு ரசாயன ஊசி செலுத்தப்படுகிறது.
"இதன் காரணமாக குறிப்பிட்ட நாளில் கறிக்கோழி விற்பனைக்கு தயாராகிறது. ஆனால் நாட்டுக்கோழி வளர மாதக்கணக்காகிறது. இந்நிலையில் கடைகளில் உயிருள்ள கறிக்கோழிகள்தான் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கோழிபண்ணைகளில் இறந்த கோழிகளைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ உணவகங்கள், பிரியாணி கடைகளில் ஆய்வு செய்யவேண்டும்," என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவர்கள் கூறுகையில், ஆட்டிறைச்சியை தேவையான அளவுக்கு சாப்பிடலாம். கோழியில் நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால் கறிக்காக வளர்க்கப்படும் கறிக்கோழியை உண்பவர்களுக்கு சீக்கீரம் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு, பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல், உடல் பருமன் அதிகரித்தல், இதயநோய் உள்பட பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் முடிந்தவரை கறிக்கோழியை தவிர்த்தாலே பலநோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்," என்று கூறினர்.

