சேலம்: கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுமார் 2.4 லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.
இதன் காரணமாக அந்த அணை இன்று பாசனத்திற்குத் திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று இரவுக்குள் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்கெனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது.
ஒகேனக்கல் காவிரிக்குத் தொடர்ந்து அதிகமாக தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரைபுரண்டு வருவதால் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நீலகிரி மாவட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
பேய்மழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளம், வீடுகள் இடிந்து அந்த மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தம் 1,200 வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. 5,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவலாஞ்சியில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பல இடங்களில் பாதிக்கப்பட்டு இருக்கும் மின்கம்பிகளைச் சரிசெய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஆயிரக்கணக்கான மரங்கள் அங்குமிங்கும் விழுந்து கிடக்கின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல இடங்களிலும் மரங்கள் ஒதுங்கி இருக்கின்றன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன.
சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் 24 மணி நேரமும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வேளையில், நீலகிரி மாவட்டத்தில் பேய்மழை காரணமாக எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை முழுமையாக மதிப்பிட்ட பிறகு தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரணம் கோரும் என்று தமிழக விலங்கு நலத்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பயிர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான கால்நடைகள் மடிந்துவிட்டன என்று அவர் கூறினார். முழுமையான மதிப்பீடு முடிந்ததும் விரிவான அறிக்கை மத்திய அரசாங்கத்திடம் தாக்கல் செய்யப்படும் என்றாரவர்.
இதனிடையே, நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டு நாட்களாகப் பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நீல-கிரி வெள்ள நிவா-ரணப் பணி-க-ளுக்-காக திமுக எம்-எல்ஏ, எம்-பிக்-கள் நிதி-யில் இருந்து ரூ. 10 கோடி நிவா-ர-ணம் வழங்-கப்-படும் என்-றும் அவர் அறி-வித்-தார்.

