வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தை நேரில் சென்று பார்த்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகையாக 10 கோடி ரூபாய் தருவதாக தெரிவித்திருந்தார்.
தமிழக மக்களிடையே நல்ல பெயர் வாங்கி வாக்குகளைப் பெறவே ஸ்டாலின் நாடகமாடுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
"செய்திகளைப் பார்க்காமல் ஸ்டாலின் கருத்துகள் தெரிவிக்கிறார். உண்மை நிலவரம் குறித்து அவருக்கு ஏதும் தெரியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு அமைச்சர்கள் எவரும் செல்லவில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அங்கு நேரில் சென்று பார்த்தார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அங்கு செல்லவிருக்கிறார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து புதன்கிழமையன்று சென்னையில் கூட்டம் நடத்தப்படும்," என்றார் திரு
பழனிசாமி.
தமிழ்நாட்டையும் யூனியன் பிரதேசமாக மத்திய அமைச்சு அறிவித்தால் அதை அதிமுக அரசு எதிர்க்காது என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியதற்கு திரு எடப்பாடி கண்டனம் தெரிவித்தார்.
சிதம்பரத்தால் தமிழ்நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் பூமிக்குப் பாரமாகத்தான் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

