சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில் போலிசார் கடந்த இரு தினங்களாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இவ்வாறு சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் 24 மணி நேரமும் சோதனை நடத்துகின்றனர். இந்நடவடிக்கையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. பார்சல் பிரிவில் கூடுதல் கவனம் தேவை என ரயில்வே ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

