சென்னை: இந்தியத் திருநாட்டை வல்லரசு நாடாக மாற்ற மக்கள் உறுதியேற்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உறுதி ஏற்போம் என்றும் அவர் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல், தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு சிறப்பாககச் செயல்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, ஆங்கிலேயர்களின் அடிமைத் தளையிலிருந்து நமது தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தனர்.
“தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து,இந்தியாவை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம்,” என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தன்னலமற்ற தியாகிகள் அரும்பாடுபட்டு போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை போற்றிப் பாதுகாப்பது நாட்டு மக்களின் தலையாய கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை போற்றி பெருமைப்படுத்தும் வகையில், விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வந்த மாதாந்திர ஓய்வூதியத்தை 13 ஆயிரம் ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்கியதாகத் தெரிவித்தார்.