சென்னை: தேமுதிகவால் அதிமுக கூட்டணிக்கு எந்தவிதப் பலனும் இல்லை என்பதால் அக்கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி இடம்பெற்று நான்கு தொகுதிகளைப் பெற்ற தேமுதிக, ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் வேலூர் தேர்தலில் தேமுதிக மேற்கொண்ட பிரசாரமும் எடுபடவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாத நிலையில், தேமுதிகவுக்கு மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தும் பறிபோனது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் மூத்த பிரமுகர்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து இக்கட்சியை கழற்றிவிட முடிவு செய்திருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது.