தஞ்சை: இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் பாஜக வெற்றி பெறும்,” என்றார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவோம் என உறுதி எடுத்தோம். அதன்படி தற்போது ஊழலை ஒழித்துவிட்டோம்.
“அடுத்து ஊழல்வாதி களை ஒழிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு உள்ளோம். நாங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவோம்,” என்றார் இல.கணேசன்.
உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்து, இந்த ஆண்டுக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப் படுவர் என்று குறிப்பிட்ட அவர், டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழக பாஜகவுக்கும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றார்.
தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு அக்கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள் மத்தியில் பலத்த போட்டி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேரை அக்கட்சி மேலிடம் தலைவர் பதவிக்கு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.