திண்டிவனம்: வீடுகளின் வெளிப்புற மற்றும் மதில் சுவர்களின் மீது ரகசியக் குறியீடுகள் வரைந்த நேப்பாள இளையர்கள் மூன்று பேரிடம் திண்டிவனம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் திண்டிவனம் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் மூன்று இளையர்கள் வீடு வீடாகச் சென்று பழைய துணிகளைச் சேகரித்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற சிறிது நேரத்தில் வீட்டுச் சுவர்களில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் குழம்பினர்.
இதையடுத்து பெரிய அளவில் கொள்ளையடிக்க வடமாநிலக் கும்பல் ஒன்று திட்டமிட்டிருப்பதாக கிராம மக்கள் மத்தியில் பீதி பரவியது. இதனால் இரவு முழுவதும் கிராம மக்கள் தூங்காமல் இருந்துள்ளனர்.
இதற்கிடையே திண்டிவனம் நகரிலும் சில வீடுகளில் இத்தகைய குறியீடுகள் காணப்பட்டதால் போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலிசார் ஆய்வு செய்தபோது, இளையர்கள் மூவர் குறியீடு இடுவது உறுதி செய்யப்பட்டது.
மூவரையும் கண்டுபிடித்த போலிசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் கூர்காவாக இருப்பதாகவும் பணம் தராத வீடுகளில் குறியீடு வரைந்து வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மூவரிடமும் விசாரணை நீடித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.