சட்டவிரோத கடன் முதலை செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 123 நபர்களை போலிஸ் கைது செய்துள்ளது.
சிங்கப்பூரில் பல இடங்களிலும் செவ்வாய் முதல் வியாழக்கிழமைவரை மூன்று நாட்கள் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
உளவு போலிஸ் துறை அதிகாரிகளும் ஏழு தரைப் பிரிவுகளைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகளும் சோதனைகளை நடத்தி 83 ஆடவர்களையும் 40 பெண்களையும் பிடித்தனர்.
அவர்களுக்கு வயது 19 முதல் 64 வரை என்று தெரிவிக்கப்பட்டது. பிடிபட்டவர்களில் 90 பேர் வங்கிக் கணக்குகளைத் திறந்து தங்கள் ஏடிஎம் அட்டைகளையும் ரகசிய எண்ணையும் கடன் முதலைகளிடம் கொடுத்து சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் தொழிலில் அவை பயன்பட அனுமதித்துள்ளனர். கைதானவர்களில் 23 பேர் கடன் முதலைத் தொழிலுக்கு உதவியவர் என்றும் இருவர் கடன்பெற தவறான தகவல்களைக் கொடுத்து உள்ளதாகவும் நம்பப்படுகிறது.