சென்னை: நளினியின் தற்காலிக விடுப்பை (பரோல்) மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி (படம்) உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
கணவன் மனைவியான முருகனும் நளினியும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகன் - நளினி தம்பதியின் மகள் ஹரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்த நளினி ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டது. ஜூலை 25ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பியிருந்தார்.
மனுவை நேற்று பரிசீலித்த சிறைத்துறை அதிகாரிகள் நளினியின் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டனர்.