மதுரை: உப்பு கூடவும் கூடாது; குறையவும் கூடாது. கூடினால் ஆரோக்கிய கேடு. குறைந்தால் உணவு ருசிக்காது. மாட்டு வண்டியிலும் கழுதையைப் பொதியாகச் சுமக்கச் செய்தும் ஊர் ஊராகச் சுற்றி அந்த உப்பை விற்பனையாளர்கள் விற்பர்.
இப்போது இந்த உப்பை ஒருவர் மதுரையில் சைக்கிளில் விற்று வருகிறார். இவர் ஒரு சாமானிய மனிதரல்ல. போதைப்பொருள் வியாபாரி.
மதுரையில் பல ஆண்டுகளாக கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்து பல மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாழாக்கியவர் தற்போது உப்பு வியாபாரியாக உழைத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார்.
உப்பால் தனது வாழ்க்கை புடம்போட்ட தங்கமாக மாறி வருவதாகக் கூறும் இப்ராஹிம் ஷா, 54, மதுரை, மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் மீது திலகர் திடல், திடீர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் உள்ளன.
பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதைப்பொருளை விற்றதாக தொடர்ந்து இவரும் அடிக்கடி கைது செய்யப்பட்டு வந்தார்.
இவர் மீது வழக்குகள் பதிவு செய்தே போலிசாரும் ஓய்ந்துபோயினர்.
ஷா அன்றாடம் தந்துவரும் தலைவலிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய பெண் போலிஸ் அதிகாரி பிளவர்ஷீலா, ஷாவை அழைத்து புத்திமதி கூறினார்.
இந்த அறிவுரையால் ஒரு தெளிந்த மனநிலைக்கு வந்த ஷா, 'திருந்தி வாழ ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்' என்று கூறி கண் கலங்கினார்.
இதையடுத்து தன் செலவில் சைக்கிள், உப்பு மூட்டையை வாங்கிக்கொடுத்து ஷாவை உப்பு வியாபாரியாக மாற்றி தொழிலைத் துவக்கிவைத்தார்.
பிளவர் ஷீலா கூறுகையில், "வழக்குச் செலவு, வழக்கறிஞர் செலவு என ஒவ்வொரு முறையும் இப்ராகிம் ஷாவுக்கு செலவுத் தொகை அதிகரித்துக்கொண்டே போனது.
"இதை ஈடுகட்டுவதற்காகவே தொடர்ந்து கஞ்சா விற்றுவந்தார். இதனால் மாணவர்கள் உள்ளிட்டோர் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவர் என்பதை விளக்கினேன்.
"உப்பு வியாபாரம் செய்வதன் மூலம் வழக்குச் செலவுகள் இருக்காது என அவருக்கு தெளிவுபடுத்தினேன். தற்போது உப்பு வியாபாரம் செய்து வரும் அவரைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்," என்று கூறினார்.
பெண் போலிஸ் அதிகாரியின் முயற்சியை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

