தஞ்சை: காதல் விவகாரத்தில் கருணாகரன் என்ற ஓட்டுநர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 11 பேர் கைதாகினர். இதைத் தொடர்ந்து பெருமாக்கநல்லூர் கிராமத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள பெருமாக்கநல்லூரைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சூர்யா, 22. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் கருணாகரன், 42. இவரது உறவினரான 17 வயது சிறுமியும் சூர்யாவும் காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சூர்யாவும் சிறுமியும் கடந்த 18ஆம் தேதி திடீரென தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் சூர்யாவின் குடும்பத்தினரை தாக்கினர். இதற்கு பதிலடியாக சூர்யாவின் உறவினர்கள் கருணாகரனை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.