தமிழகத்திற்குள் ஆறு பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாகப் புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்ததை அடுத்து மாநில போலிசார் உச்ச விழிப்புநிலையில் உள்ளனர். அந்தப் பயங்கரவாதிகள் ‘லஷ்கர்-இ-தைபா’ (Lashkar-e-Taiba) அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
சந்தேகப்படும்படியான நபரையோ நடவடிக்கையையோ பார்த்தால் தங்களிடம் உடனே தகவல் தருமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக தமிழக போலிஸ் படையின் பேச்சாளர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கையை அடுத்து சென்னையிலும் கோயம்புத்தூரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமான, ரயில்வே நிலையங்கள், ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட பொது இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாகப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் குறைந்தது 10 பேரை தேசிய விசாரணை அமைப்பு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஒருவரான அஸருடீன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் ஐ.எஸ் அமைப்பின் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.