சிவகங்கை: கீழடி அகழாய்வில் பல்வேறு அரிய பொருட்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வடிகால் சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி இருந்தது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்படுகின்றன.
தற்போது அங்கு 5ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறுகிறது. தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறும் இந்தப் பணிக்காக அப்பகுதியில் முப்பது குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக்காசுகள் உட்பட 700க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.