கூடலூர்: தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14,707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
இருபோகப் பாசனம் நடைபெறும் இந்தப் பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணை நீர் ஆதாரமாக திகழ்கிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1ஆம் தேதி இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதாலும் தண்ணீர் திறப்பது காலதாமதம் ஆனது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியதை முன்னிட்டு முல்லைப்பெரியாறு அணைக்குத் தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 131.10 அடி வரைத் தொட்டது.
இதைத் தொடர்ந்து முதல் போகப் பாசனத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடத் தமிழக முதலமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன் பேரில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதகுப் பகுதியில் பூசை செய்து பொத்தானை அழுத்தி அணை மதகை திறந்து வைத்தார். கம்பம் பள்ளத்தாக்கிற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் 120 நாட்களுக்குத் தண்ணீர்த் திறந்துவிடப்பட்டது.
முன்னதாக தேக்கடியில் உள்ள வன துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.
இதேபோல் மதகுப் பகுதியில் தண்ணீர் திறந்து விடும் முன்பு சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
முதல் போகப் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுக்காவில் 11,707 ஏக்கர் நிலம், தேனி தாலுகாவில் 2,412 ஏக்கர் நிலம், போடித் தாலுகாவில் 488 ஏக்கர் நிலம் வீதம் மொத்தம் 14,707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் குறுகிய கால நெற்பயிர்களைச் சாகுபடி செய்து பயன் அடைய வேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் இருப்புக் குறைந்துவிட்டால் முறை வைத்துப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும்.
எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

