மதுரை: டெல்லியைச் சேர்ந்த ரிபுதமன் என்ற தடகள வீரர், தனது குடும்பத்தை மட்டுமின்றி நாட்டையும் தம்மால் இயன்ற அளவு முன்னேற்றவேண்டும் என்பதில் பெரும் சிரத்தை காட்டி வருகிறார்.
அவ்வகையில் ரிபுதமன் 60 நாட்களுக்குள் 50 நகரங்களில் 1,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி குப்பையில்லா இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பொறியியல் பட்டம் பெற்றவரான ரிபுதமன், 31, தடகள வீரரும் ஆவார். மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
1,000 கிமீ விழிப்புணர்வு ஓட்டத்தை கேரள மாநிலம், கொச்சியில் துவங்கியவர் நேற்று முன்தினம் காலை மதுரை ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலை, எம்ஜிஆர் பேருந்து நிலையப் பகுதிகளில் 8 கி.மீ. துாரம் ஓடி 31 கிலோ குப்பைகளைச் சேகரித்தார்.
செய்தியாளர்களிடம் ரிபுதமன் கூறுகையில், “மதுரை, கோவையைத் தொடர்ந்து சேலம், புதுச்சேரி, சென்னை, வேலுாருக்குச் செல்கிறேன். அத்துடன் கர்நாடகம், மராட்டியம், தெலுங்கானா, ஒரிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் இந்த விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடர்ந்து டெல்லியில் நவம்பர் தொடக்கத்தில் முடிக்க உள்ளேன்.
“சாலையோரங்கள், தெருக்களில் குப்பைகளை வீசுவதால் பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும்.
“குப்பையில்லா இந்தியாவை உருவாக்க 22 மாநிலங்களில் 50 முக்கிய நகரங்களில் ஓடியபடி குப்பைகளைச் சேகரிக்கிறேன்.
“இதைப் பார்த்து மக்களின் மனம் மாறும். குப்பையை சாலையில் வீசுவதைத் தவிர்ப்பர். பாலிதீன் பயன்பாட்டை மக்கள் முழுமையாக கைவிட வேண்டும்,” என்றார்.