திருவனந்தபுரம்: தமிழகத்தில் கோயில் குளங்களை சுற்றிப் பார்த்த கேரளாவைச் சேர்ந்த குடும்பம் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களுடைய காரிலிருந்து குழந்தை கீழே விழுந்துவிட்டது.
வீட்டை அடைந்த பிறகே குழந்தை காணாமல் போனது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே குழந்தையை மீட்ட போலிசார் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
வீட்டிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் குழந்தை காணாமல் போயிருந்தது. இரவு 9.40 மணியளவில் போலிசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் சாலையில் ஒரு குழந்தை தவழ்ந்து செல்வதாக ஒருவர் கூறினார்.
குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் மேலும் கூறினார். உடனே போலிசார் பல காவல் நிலையங்களுடன் தொடர்பு கொண்டனர்.
பின்னர் இடுக்கியிலிருந்து அந்த அழைப்பு வந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தி தெரிவித்தது. விசாரணையில் ராஜாகமல் சோதனைச் சாவடி அருகே குழந்தை விழுந்தது என்றும் சோதனைச் சாவடியை தாண்டி குழந்தை தவழ்ந்து சென்றது என்றும் போலிசார் கூறினர்.
பின்னர் பெற்றோருடன் தொடர்புகொண்டு குழந்தையை போலிசார் ஒப்படைத்தனர்.