சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியா வில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அந்த நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
75.7 செ.மீ. உயரமுள்ள அந்த வெண்கலச் சிலையை 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓலிவர் போர்ஜ் அண்ட் பெரண்டன் லிங்க் நிறுவனத்திடம் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் வாங்கி யிருந்தது. இந்த நடராஜர் வெண்கலச் சிலையை மீட்கும் முயற்சியில் தமிழக காவல்துறை இறங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கான இந்திய துணைத் தூதர் கார்த்திகேயன் மூலம் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்த நடராஜர் சிலை தமிழகத்தைச் சேர்ந்தது என்பதற்கான ஆவணங்கள் அப்போது ஒப்படைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க அருங்காட்சியகம் முடிவு செய்தது. இன்னும் ஓரிரு நாளில் நடராஜர் சிலை டெல்லி வழியாக தமிழகம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.