கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் அரங்க அரவிந்த தினேஷ், 26. ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இவர் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்தார். ஆனால், 15 நாளிலேயே பிரியதர்ஷினியை அவர் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் திருப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு பிரியதர்ஷினி சென்றுவிட்டார்.
பின்னர், தமக்கு மணமாகவில்லை என்று கூறி இணையத்தில் பெண் தேடிய தினேஷுக்கு கரூரைச் சேர்ந்த அனுப்ரியா, 23, கிடைத்தார். அவருடன் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திருமணம் நடந்தது.
ஆனால் ஒருசில மாதங்களில் அனுப்ரியாவையும் தினேஷ் கொடுமைப்படுத்தத் தொடங்கினார். கொடுமை தாங்காது அந்தப் பெண்ணும் தமது தாய் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
அதனால், மூன்றாவது திருமணத்திற்குத் தயாரானார் தினேஷ். மணமாகவில்லை என்று மறுபடியும் இணையத்தில் தெரிவித்து தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார். அந்த விவரம் இரு மனைவிகளுக்கும் தெரிந்துவிட்டது. இருவரும் தொடர்புகொண்டபோது ‘மூன்றாவது கல்யாணம் செய்வேன்; முடிந்ததைச் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டார்.
இதனால் பிரியதர்ஷினி, அனுப்பிரியா இருவரும் நேராக தினேஷ் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்றனர். தினேஷை வெளியில் அனுப்பக் கோரி நிறுவனத்தின் வாசலிலேயே அந்த இரு பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலிசார் விசாரணைக்காக தினேஷை அழைத்தனர். அவர் வெளியில் வந்ததும் இரு மனைவிகளும் சேர்ந்து தினேஷை சரமாரியாகத் தாக்கினார்கள். அவர்களிடமிருந்து தினேஷை மீட்டுச் சென்ற போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.