சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்னும் ஓரிரு மாதத்தில் அதாவது நவம்பருக்குள் விடுதலையாகி வெளியே வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து வெளியாவது குறித்து அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதனை மெய்ப்பிக்கும் வகையில் டிடிவி தினகரன் ஒரு தகவலை வெளியிட்டார். “சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம், அவர் நிச்சயம் விரைவில் வெளியே வருவார்,” என்பதே அந்தத் தகவல்.
அதைக் காட்டிலும் தற்போது வெளியாகி அதிமுக வட்டாரத்தில் வேகமாகப் பரவி வரும் தகவல் என்னவெனில் பெங்களூரு சிறையில் தம்மைச் சந்தித்த சில முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா மனம் திறந்து பேசினாராம். “இன்னும் ஓரிரு மாதங்களில் நான் சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
“நான் வெளியே வந்ததும் கட்சிப் பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே, அதுவரை அனைவரும் அமைதியாக இருங்கள்,” என அந்த நிர்வாகிகளிடம் சசிகலா கூறியதாக தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சசிகலாவின் இந்த ஆறுதல் வார்த்தைகளால் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் புதுத் தெம்புடன் சென்னை திரும்பியுள்ளனராம். அதிமுக தொண்டர்களும் இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்களாம்.