புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19ஆம் தேதி வரை அவர் சிறையில் இருப்பார்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் பிணை வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இதேபோல், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதை எதிர்த்தும் சிதம்பரம் சார்பில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது. இதற்காக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அத்துறையினர் மனு தாக்கல் செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.