சென்னை: பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தியதில் மதிப்பெண்கள் மாறியிருப்பது இருப்பது தெரியவந்தது. விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பித்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது.
5,000 மாணவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்து இருந்ததில் முறையாக திருத்தம் செய்யப் படாததாலும் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் 1,500 மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது. 80 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு 8 மதிப்பெண் போடப்பட்டிருந்தது.
இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தம் செய்த ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களை அரசு தேர்வுத்துறை விசாரணைக்கு வரவழைத்து எச்சரித்தது.
மேலும் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கவனக்குறைவாகச் செயல்பட்ட சுமார் 1000 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை பள்ளி கல்வித்துறை இயக்குநரிடம் ஒப்படைத்துள்ளது. நடவடிக்கைக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.