சென்னை: தரமணி மகாத்மா காந்தி 100 அடி சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் திணறிக்கொண்டு இருக்க, கையில் ‘ஸ்டாப்’ பலகையுடன் போக்குவரத்தை சீர்செய்து வருகிறார் பாயம்மா. கடந்த மூன்று மாதங்களாக தானாக முன்வந்து இந்தச் சேவையைச் செய்து வரும் இவரது இயற்பெயர் சகூர் பானு. ஒருநாள் இந்தப் பகுதியைக் கடக்க முற்படும்போது, வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறார் சகூர் பானு.
லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அவர், பள்ளிக்குழந்தைகள் அதிகம் கடந்து செல்லும் பாதையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்வதைக் கண்டு, கவலையுற்று, தானே களத்தில் இறங்கி சேவையைத் தொடங்கிவிட்டார். இவரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி காவல்துறை தரப்பில் மேலாடை மற்றும் ‘ஸ்டாப்’ பலகை வழங்கப்பட்டுள்ளது.