கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அத்திப்பாளையம் பகுதியில் ‘டாஸ்மாக்’ கடை அருகே மதுபோதையில் நின்றிருந்த பிரபாகரன் என்ற காவலர் சரண்யாவை தனது இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்று வழிமறித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா அருகிலிருந்த கடை ஒன்றில் தஞ்சம் அடைந்து தமது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். அதற்குள் காவலர் பிரபாகரனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதும் தனது இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பிரபாகரனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.