சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு அவரது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்திட ஒரு மாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் ஜூலை 25ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டியிருந்த நிலையில் உயர் நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.