விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக ஒரு மாருதி சுசுகி வாடகை காரில் உறவினர்களுடன் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். அதிகாலை 6 மணி அளவில் தியாகதுருகம் புறவழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்ற நிலையில் ஓட்டுநர் சிவகுமார் கண் அயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து உருண்டு 15 அடி ஓடைப்பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஏழுமலை, பாலாஜி, சித்திரா, ஜெயக்கொடி ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் சிவக்குமார், சாந்தி ஆகிய இருவர் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு உயிரிழந்த நால்வரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.