சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின்படி, இப் பொதுத்தேர்வு நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு இப்படியொரு தகவல் வெளியானபோது, “மாநில அரசு விரும்பினால் இப்பொதுத் தேர்வை நடத்தலாம் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக தற்போது இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில், இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
“இது தமிழக அரசு உச்சக்கட்ட குழப்பத்தில் இருப்பதைக் காட்டுகிறது. அப்படி என்றால், பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மேலும், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டால் இடைநிற்றல் அதிகமாகும் என்ற கல்வியாளர்களின் எச்சரிக்கை குறித்துத் தமிழக அரசுக்குக் கவலை இல்லையா?
மத்திய அரசு இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிச் சொல்லி, மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, அரசுக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது,” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சு விளக்கம்
“பொதுத் தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் இரண்டு தாள்களாக இருந்தன.
மொழிப் பாடத்திட்டங்களில் அதை ஒன்றாக மாற்றி அமைத்திருக்கிறோம். அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தாள் இருந்தால்போதும் என்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,’’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி செய்வதில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 5, 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது.
இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கொண்டு வரப்படாது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.