சென்னை: சென்னைப் பள்ளிக்கரணையில் பெண் பொறியாளர் சுபஸ்ரீ என்பவர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து லாரியில் சிக்கி பலியான சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கி உள்ளது.
தேவையில்லாமல் பகட்டுக்காக அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது மகன் திருமணத்திற்காக சாலையின் நடுவே வைத்த பேனர் அவரது உயிரைப் பலி கொண்டுள்ளது.
சுபஸ்ரீ பலியான விதம் மக்கள் மனதில் இருந்து எளிதில் அகற்ற முடியாதபடி மாறி உள்ளது.
பெருங்குடி கந்தன்சாவடியில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுபஸ்ரீ, குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கோர விபத்தைச் சந்தித்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயின் தாமஸ் மவுண்ட் போக்குவரத்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவனை கைது செய்துள்ளனர்.
அவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விபத்து ஏற்படுவதற்கு மூல காரணமான முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மிக சாதாரண பிரிவில் பிணையில் வெளியில் வரும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொறியாளர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தியது.
அப்போது பேனர் கலாசாரத்தை அரசும், அதிகாரிகளும் ஊக்குவிப்பதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பேனர் விவகாரத்தில் ஏராளமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்றும் இது தொடர்பாக முழுத் தகவல்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் சட்டத்தை மதிக்காமலும் மற்றும் அனுமதி பெறாத வகையிலும் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், 15 மண்டல அதிகாரிகளிடமும் பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களாக பேனர்களை அகற்றும் பணி நடந்தது. நேற்று பிற்பகல் வரை சென்னையில் 2,500க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.
பதாகைகளை அகற்றும் போது அரசியல் கட்சியினர் யாராவது குறுக்கீடு செய்தால் அதுபற்றி போலிசில் தெரிவிக்கும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அதிமுக., திமுகமற்றும் பொதுமக்கள் வைத்திருந்த ஏராளமான கட்-அவுட்டுகளும் அகற்றப்பட்டன.
லாயிட்ஸ் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை பகுதிகளில் அதிக அளவு பேனர்கள் அகற்றப்பட்டன.
அம்பத்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, திருவொற்றியூர் பகுதிகளில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி தெருவுக்குள் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டன.
சென்னையில் ஏதாவது தெருக்களில் சட்ட விரோதமாக பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தால் அது பற்றி மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் உள்ள பெரிய பதாகைகள் மட்டுமே இப்போது அகற்றப்பட்டு வருகின்றன.
பொதுவாக சாலைகளில் வைக்கப்படும் அனைத்துப் பதாகைகளும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவுவதாகத் தெரிகிறது.
முக்கிய தெருமுனைகளில் மற்றும் விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் பதாகைகள் வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவற்றையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் ஆபத்தான வகையில் உள்ள பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகளைக் காவல்துறையினரும் மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் இது தொடர்பாகப் புதிய உத்தரவுகளை நேற்றுப் பிறப்பித்தனர்.
காவல் நிலையங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அனுமதி பெறாத பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு அவை பற்றிய விவரங்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.