சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையின் 16 கண் மதகுகள் மூடப்பட்டன. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநில அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டதால் அணைக்குப் பல நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த 6ஆம் தேதி அணை நீர்மட்டம் 118.11 அடியாக உயர்ந்தது. அன்று நீர்வரத்து விநாடிக்கு 73,000 கனஅடியாக இருந்த நிலையில், அன்று இரவு அணையில் இருந்து கூடுதலாக நீரை வெளியேற்ற 16 கண் மதகுகள் திறக்கப்பட்டன. கடந்த 7ஆம் தேதி அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இப்போது மழை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் நீர் வரத்தும், தண்ணீர் திறப்பும் குறைந்ததை அடுத்து சனிக்கிழமை காலை 9 மணியளவில் 16 கண் மதகுகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது என்று அணையின் நிர்வாகம் தெரிவித்தது.