புதுடில்லி: கோவை வடிவேலம்பாளையத்தில் ஓர் இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் பாட்டியைத் துணை அதிபர் வெங்கையா நாயுடு மிகவும் பாராட்டினார்.
“நாட்கூலி ஊழியர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லிகளை விற்கும் மூதாட்டியான வடிவேலம் பாளையம் கமலாத்தாளின் புனித சேவைக்குத் தலைவணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறது. என்னுடைய வணக்கங்கள்,” என்று துணை அதிபர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதானவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி மிகவும் பிரபலம்.
25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஓர் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக விறகு அடுப்புப் புகையில் வாடி, இட்லி சமைத்து விற்பனை செய்த கமலாத்தாள் பாட்டிக்குச் சமையல் எரிவாயு தோம்பு வழங்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 600 இட்லிகளை விற்று பிழைப்பு நடத்தும் இந்தப் பாட்டி, இட்லிக்குத் தொட்டுக்கொள் ளும் சட்னியை இன்னமும் கல் உரலிலேயே அரைத்துக் கொடுப்பது மிகவும் குறிப்பிடத்தக்க, பலரும் விரும்பும் ஒன்றாக உள்ளது.