கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நகரின் புறநகரான கீரநாதம் என்ற பகுதியில் குடிதண்ணீர்த் தொட்டியில் நச்சு கலந்திருப்பதாக செய்தி பரவியதை அடுத்து அந்தத் தொட்டியில் இருந்த 30,000 லிட்டர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால் பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர் இன்றி தவித்தனர். கீரநாதத்தில் குடிசை மாற்று வாரியம் 1,280 வீடுகளைக் கட்டி இருக்கிறது. அவற்றில் 1,130 வீடுகளில் 5,000 பேர் வசிக்கிறார்கள்.
அவர்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காக பாதாள நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அந்தத் தொட்டிகள் அமைந்திருக்கும் இடத்தில் பணிபுரியும் சோணை என்பவர், மோட்டாரை போடுவதற்காக சனிக்கிழமை அங்கு சென்றபோது தொட்டிக்கு அருகே ஒரு போத்தல் கிடந்ததைக் கண்டார். அதில் பாதி அளவுக்கு வெள்ளை நிற திரவம் இருந்ததை அவர் பார்த்தார். அது நச்சாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்ட சோணை, அது பற்றி தன்னுடைய துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், தொட்டியில் இருந்த சுமார் 30,000 லிட்டர் குடிநீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் ஏராளமான வீடுகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் இன்றி தவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் புலன்விசாரணை நடந்து வருகிறது.