கோவை: கோவையில் உள்ள தனியார் மருந்தகத்தில் பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்ததால் அதிர்ச்சி அைடந்து மருந்துக் கடையைச் சுமார் 100 பேர் முற்றுகையிட்டனர்.
ஏ. முஸ்தபா, 24, என்பவர் அந்தக் கடையில் பல் வலிக்காக இரண்டு மாத்திரைகள் வாங்கிய பிறகு அதில் ஒன்றில் ஒரு கம்பி இருந்ததைக் கண்டு திடுக்கிட்டு அது பற்றி அந்த மருந்துக் கடையில் புகார் தெரிவித்தார். உடனே இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது.
விரைந்து வந்த கோவை மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், அந்த மருந்தகத்தை விசாரித்தனர். முஸ்தபாவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாத்திரை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் முஸ்தபா புகார் மனு அளித்தார்.
இரும்புக் கம்பி இருந்த மாத்திரையின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி கூறினர். அதைக் கேட்ட பின் அனைவரும் அமைதி அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.