கோயம்புத்தூர்: கோவை- அன்னூர் சாலையில் கணேசபுரம் அருகே அன்னூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மொபட்டைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனை செய்தபோது மொபட்டில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷயா தாஸ் (வயது 40) என்பதும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக அன்னூர் அருகே உள்ள மாசகவுண்டன் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் இவர் வட மாநிலத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முகவராக இருப்பதும் தெரியவந்தது.
இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி பிஜாய் லட்சுமி தாஸ் (30) என்பவருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்துக் காவல்
துறையினர் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் வீட்டில் இருந்து 23.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கணவருடன் சேர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிஜாய் லட்சுமிதாசை கைது செய்தனர்.
இவர்கள் பயன்படுத்திய ஒரு மொபட்டையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணை முடிந்தபின்னர் கணவன்-மனைவி இருவரையும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.