சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் காலம் முடிந்து சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக அவரின் உறவு வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பிரபல வார ஏடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்ற சசிகலா, சட்டவிதிகளின்படி அடுத்த ஆண்டு (2020) இறுதியில்தான் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசு விடுமுறை, கைதிக்கான விடுமுறை, பெரும் தலைவர்கள் பிறந்தநாள் விடுமுறை ஆகியவற்றைச் சேர்த்தால் ஆண்டுக்கு 40லிருந்து 45 நாட்கள் வரை தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படும். மேலும், இந்த வழக்கில் முன்பே சிறையில் இருந்த நாட்களும் கழிக்கப்படும். அதன்படி பார்த்தால் சசிகலா 2020 ஜூன் மாதம் வெளியே வரவேண்டும்.
“இந்த நிலையில், வயது, நன்னடத்தை, பாலினம் (பெண்) போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி சசிகலா ஓராண்டு முன்னரே விடுதலை செய்யப்பட உள்ளார். வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அவர் விடுதலை செய்யப்
படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.
“முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை சசிகலாவின் தம்பி திவாகரன் முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி டெல்லி சென்ற திவாகரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரைச் சந்தித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் தூதுவராகச் சென்ற சந்திரலேகா, அண்மையில் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகு இதற்கான பணிகள் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. பாஜகவும் இதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது,” என்று வார ஏடு தெரிவித்துள்ளது.
“நான் வெளியே வரும் வரை அமைதியாக இரு. பாஜக அரசைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதே,” என டிடிவி தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டிருந்தாராம். தினகரன் அமைதியாக இருந்து வருவது சசிகலா வெளியில் வருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என அமமுக கட்சி வட்டாரம் கூறியது.