தேனி: தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவம் படிப்பதற்காகச் சேர்ந்த மாணவர்களில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரைப் போலவே கோவையிலும் மேலும் இருவர் ஆள்மாறாட்டம் செய்து இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்தது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக மாணவர் உதித்சூர்யாவையும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் சிபிசிஐடி போலிசார் நேற்று முன்தினம் திருப்பதி மலையடிவாரத்தில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டது. அனைத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபோது இரண்டு பேரின் புகைப்படங்கள் வேறுபட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் சந்தேகித்தது.
ஒரு மாணவரும் ஒரு மாணவியும் நீட் தேர்வின்போது கொடுத்த புகைப்படமும் கல்லூரியில் சேரும்போது கொடுத்த புகைப்படமும் வேறுவேறாக இருந்ததாக கருதியது.
இதையடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பாக மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி முறைகேடு செய்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரையும் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டது.
அங்கு அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடந்த விசாரணையில் மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கி இருக்கிறது. மாணவியின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
“சமூகத்தில் கல்வி முதல் பணத்தை முதலீடு செய்வதுவரை அனைத்திலும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வெற்றிபெறும் மோசடி நடக்கிறது. இதுபோல் மருத்துவக் கல்வியிலும் மாணவர்களின் விபரீத விளையாட்டு தொடர்கிறது.
“இதனால் பொதுமக்களின் உயிருக்கே உலை வைக்கும் அபாயம் நிலவுகிறது. இதைத் தடுக்க அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.