புதுடெல்லி: கடல் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பை, சூரத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக பருவநிலை மாற்றம் தொடர்பான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐநா சபையின் பருவநிலை தொடர்பான மாநாட்டில் உலக வெப்பமயமாதல் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல், கடல்நீர் மட்டம் உயர்வு குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையை ஐநா வெளியிட்டது.
புவி வெப்பமயமாவதால் பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதாகவும் இதனால் உலக அளவில் கடல் மட்டத்தின் அளவு உயரவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக பனிக்கட்டிகள் உருகுவதாகவும் இதனால் 2100களில் 1 மீட்டருக்கும் அதிகமாக கடல் மட்டம் உயரும் என்றும் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான குழு குறிப்பிட்டுள்ளது.
கடல் மட்ட உயர்வால் உலகளவில் 45 நகரங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள குழு, இந்தியாவில் சென்னை, மும்பை, சூரத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் அபாய நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
50 செ.மீ கடல் மட்டம் உயர்ந்தாலே இந்தியாவின் 4 நகரங்கள் உள்ளிட்ட 45 கடற்பகுதி நகரங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
முன்பெல்லாம் கடல் மட்ட உயர்வு தொடர்பான பாதிப்புகள் நூறாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதாவது நடக்கும்.
ஆனால், தற்போதைய நிலையைப் பார்த்தால் அடிக்கடி பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இது தாழ்
வான நகரங்களுக்கும் சிறிய தீவுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிட்டத்தட்ட 7,000 ஆய்வுக்
கட்டுரைகளை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ள ஆய்வுக்குழு, பனிக்கட்டி வேகமாக உருகி வருவதால் நாம் நினைப்பதை விடவும் வேகமாக கடல் மட்டம் உயர்கிறது.
உலக வெப்பமயமாதல் 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 முதல் 60 செ.மீ வரை கடல் மட்டம் உயரும் என தெரிவித்துள்ளது.
பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தால் புயல் பாதிப்பு, பருவநிலை மாறி மழை அதிகமாக பெய்யும், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடம் பாதிக்கும், கடற்கரை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும், வெப்பக்காற்று அதிகரிக்கும், தாழ்வான கடலோரப் பகுதிகள் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

