சென்னை: கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் வெங்காய விலை மிக அதிகமாக உயர்ந்துகொண்டே போகிறது. இந்த விலை உயர்வால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த விலை உயர்வில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் பண்ணை பசுமை காய்கறிக் கடை களில் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசை சார்ந்த நிறுவனத்திடம் இருந்து 500 டன் அதாவது 5 லட்சம் கிலோ வெங்காயத்தை வாங்க தமிழக கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகள், பண்ணை பசுமை காய்கறி கடைகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் சமயங்களில் அவை கூட்டுறவு அங்காடிகளில் சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து பாதிக்கப்பட்டதால் செப்டம்பர் மாத துவக்கத்தில் 30 ரூபாயாக இருந்த 1 கிலோ வெங்காயம் மாத இறுதியில் 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.
திடீரென வெங்காயம் விலை உயர்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்ட னர். இதையடுத்து கூட்டுறவு காய்கறிக் கடைகள், ரேஷன் கடைகளில் 1 கிலோ வெங்காயம் 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிச்சந்தையில், “தற்போது வெங்காயம் விலை 50 ரூபாய்க்கு கீழ் குறைந்தாலும் பண்டிகைக் காலம் என்பதால் அதற்கு தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
“இதனால் வெங்காய விலை மீண்டும் உயராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து 500 டன் வெங்காயம் வாங்கப்பட்டு கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.30க்கு கீழ் விற்கப்பட உள்ளது,” என்று கூறினார்.